ஹபீபி திரைப்படத்தின் மூலம் பார்வையாளர்களை தனது சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றுள்ளார் இயக்குநர் மீரா கதிரவன். முற்றிலும் புதிய பாணியில் உருவாக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தை தமிழ் சினிமாவின் புதிய அத்தியாயம் என்று சொல்லலாம்.
கடையநல்லூர் இஸ்லாமியர்களின் கலாச்சாரத்தை மிக அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளனர். வேலைக்காக வெளிநாட்டு வாழ்க்கையைத் தேர்வு செய்வதால் ஏற்படும் சிரமங்களையும், நேசத்திற்குரியவர்களின் பிரிவு ஏற்படுத்தும் வலிகளையும் படம் பேசுகிறது.
படத்தின் தொடக்கத்திலேயே தனது காந்தக் குரலால் நம்மை வரவேற்கிறார் இஸ்லாமியப் பாடகர் நாகூர் E.M. ஹனீபா. பல காட்சிகளுக்கு அவரது பாடல்கள் உயிரோட்டம் சேர்க்கின்றன.
மிக அழகாகச் செதுக்கப்பட்டுள்ள காட்சிகள், பாடல்கள் மற்றும் அதற்கேற்ற பின்னணி இசை நம்மை இருக்கையை விட்டு நகரவிடவில்லை. தங்களுக்கு வழங்கப்பட்ட பணிகளை அனைத்து கதாபாத்திரங்களும் கச்சிதமாகச் செய்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் எதிர்மறைக் கதாபாத்திரங்களின் அடையாளங்களாகக் காட்டப்படும் தொப்பி, தாடி, பெயர்கள் ஆகியவை இந்தத் திரைப்படத்தின் உயிர்நாடியாக உள்ளன.
இஸ்லாமியர்களைப் பற்றித் திரைப்படங்களில் சித்தரிக்கப்பட்ட பல்வேறு வெறுப்புணர்வுகளைத் தகர்த்து, இதுவரை சொல்லப்படாத வாழ்வியலையும் வலிகளையும் பொதுமக்கள் மத்தியில் எடுத்துவைத்துள்ளார் இயக்குநர் மீரா கதிரவன்.
வெறுப்பையும், குரோதத்தையும், தவறான பழக்கவழக்கங்களையும் ஊக்குவித்து வெளிவரும் சினிமாக்களின் மத்தியில், அன்பையும் சகோதரத்துவத்தையும் வெளிப்படுத்துகிறது இத்திரைப்படம். சண்டைக் காட்சிகள், வில்லன் கதாபாத்திரங்கள், ஆபாசமான காட்சிகள், ஆபாசப் பாடல்கள் எதுவுமின்றி அன்பை மட்டும் போதிக்கும் ஹபீபி திரைப்படம் தமிழ் சினிமாவின் புதிய அத்தியாயமாகத் திகழ்கிறது.
இஸ்லாமியர்களின் உண்மையான வாழ்வியலைச் சொல்லும் பணியில் ஹபீபி வெற்றியடைந்திருக்கிறது.
படக்குழுவினருக்கு வாழ்த்துகள்.
“அன்பின் வழியது உயிர்நிலை.”

