தென் தமிழகத்தின் இஸ்லாமியர்களின் கலாச்சாரத்தையும், பாரம்பரியமிக்க சகோதர சமயத்தவர்களினுடையே இருக்கும் பேரன்பின் பிணைப்பையும் மிக அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளனர்.
வளர்ந்து வரும் டெக்னாலஜி & மெஷின்களுக்கு இணையாக மக்கள் கையால் தறிகளை நெய்து பிழைப்பை நடத்த முடியாமல் வேலைக்காக அயல்நாட்டு வாழ்க்கையைத் தேர்வு செய்வதால் ஏற்படும் சிரமங்களையும், நேசத்திற்குரியவர்களின் பிரிவு ஏற்படுத்தும் வலிகளையும் பார்வையாளர்களின் கண்களில் கண்ணீரை வர வைக்கிறது.
இஸ்லாமிய கலாச்சாரம் என்ற ஒற்றை சாராம்சத்தை மட்டும் சொல்லாமல் இஸ்லாமியர்களின் வாழ்வியல், அவர்களின் பண்பாடு, இன்று கொஞ்சம் கொஞ்சமாக அல்ல வேகமாக மறைந்து வரும் கூட்டுக்குடும்ப அமைப்பு முறை, மாற்று மதத்தவரோடு இஸ்லாமிய மக்கள் கொண்டிருக்கும் பிணைப்பு என அத்தனையும் நம் கண் முன்னே பயணிக்கிறது.
இன்றைய நடைமுறை வாழ்வில் அங்கும் இங்குமாக முஸ்லிம் சமூகத்திற்கும், சகோதர சமயத்தவர்க்கும் இடையே பிளவுகளை ஏற்படுத்த கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள கலவரங்கள், பொய், அவதூறுகளை, சாதாரணமாக போட்டோ எடுக்க வரும் நபர்களோடு மாமா மருமகனாக உறவாடுவதில் தொடர்ந்து, குடும்ப பிரச்சனைகளை சகோதர சமய நண்பரோடு கலந்துரையாடுதல் என என் மருமவனுக்கு என் தோப்பை எழுதி தருவேன் என உயிர் தோழனாக வாழ்வின் இறுதி வரை காணப்படும் முஸ்லீம்-இந்து பேரன்பை வெளிக்காட்டி நாங்கள் மாமன் மச்சான்கள் என கூறியதன் மூலம் காவி அரசியல்வாதிகளுக்கு கொட்டு வைத்துள்ளனர்.
முஸ்லீம்கள் பயிலும் மதரசாக்கள் தீவிரவாதத்தை பயிற்றுவிக்கும் பயிற்சிக்கூடம் அங்கே நடப்பவை யாருக்கும் தெரியாது என்ற பொய் பிரச்சாரங்களை எல்லாம் ஹபீபி உடைத்திருக்கிறது. மேலும் முஸ்லிம் பெண்கள் என்றால் அவர்கள் கல்வி கற்க மாட்டார்கள், 4 சுவர்களுக்குள்ளே அடிமைகளாக வளர்க்கப்படுவார்கள், என்கிற பொது புத்தியை உடைத்து “மஹர்” (மணப் பெண்ணுக்கு மணமகன் கொடுக்க வேண்டிய கொடை), திருமணத்திற்காக மணமகனை தேர்வு செய்யும் உரிமை, ஏன் திருமணத்திற்கு பிறகு கணவனை வேண்டாம் என்று தேர்வு செய்யும் உரிமையும் பெண்ணிற்கு உண்டு என்ற இஸ்லாமிய சட்டத்திட்டங்களை எந்தவித பிரச்சார நெடியும் இல்லாமல் அழகாக காட்சிப்படுத்தி உள்ளனர்.
படத்தில் இடம் பெற்றிருக்கும் பல்வேறு பொன்மொழிகளில், ” இறுதியில் நாம் நம் எதிரிகளின் வார்த்தைகளை நினைவில் கொள்ள மாட்டோம், ஆனால் நம் நண்பர்களின் மௌனத்தை நினைவில் கொள்வோம்” என்பது தற்போதைய இந்திய சூழலில் சிறுபான்மையினரின் பாதுகாப்பு கேள்விக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், சகோதர சமயத்தவர்கள் தோள் சேர்ந்து நின்று அநீதிக்கு எதிராக களமாட வேண்டிய பொறுப்பை உணர்த்துகிறது.
மலையாள சினிமாவில் மட்டும் சாத்தியமாகி இருந்த இஸ்லாமியர்களின் வாழ்வியல் திரைப்படத்தை மிகுந்த தைரியத்துடன் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தி உள்ள மீரா கதிரவனின் முயற்சிக்கு உச்சிமுகர்ந்து பாராட்டுக்கள்.
தமிழ் சினிமாவின் வரலாற்றில் புதிய அத்தியாத்தை தொடங்கி உள்ள இயக்குனர் மீரா கதிரவன் எழுத்தாளர் வி.எஸ். முஹம்மது அமீன் உள்ளிட்டவர்களுக்கும் கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரங்களாக கனகச்சிதமாக வாழ்ந்த அனைத்து நடிகர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ஹபீபி திரைப்படம் நிச்சயமாக அன்பின் வழியது உயிர்நிலை.

