பிரபல பிபிசி ஊடகம் கடந்த வாரம் India: The Modi Question என்ற இரண்டு எபிசோட்களை உடைய ஆவணப்படத்தை வெளியிட்டது. இந்த ஆவணப்படம், 2002ம் ஆண்டு நரேந்திர மோடியின் ஆளுகைக்குக் கீழ் இருந்த குஜராத்தில் முஸ்லிம்கள் கொடூரமான முறையில் இனப்படுகொலை செய்யப்பட்டபோது, அப்போதைய குஜராத் அரசின் நேரடியான பங்கை ஆதாரங்களுடன் விவரிக்கிறது.
நரேந்திர மோடியின் தலைமையிலான தற்போதைய ஒன்றிய அரசு இந்த ஆவணப்படத்தை பிரதமர் மோடிக்கு எதிரான ஒரு பிரச்சாரம் என்று கூறி சட்டபூர்வமாக முடக்கியுள்ளது. படம் கடந்த செவ்வாய்க்கிழமை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தால் தடை செய்யப்பட்டது. புதன்கிழமை அன்று யூடியூபிலிருந்து நீக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த ஆவணப்படத்தைக் குறித்த 50க்கும் மேற்பட்ட ட்வீட்களை ட்விட்டரில் இருந்து அழிக்கும்படி ட்விட்டர் நிறுவனத்திற்கும், இது தொடர்பான வீடியோக்கள் பதிவிடப்படுவதைத் தடுக்குமாறு யூடுபிற்கும் இந்திய அரசு ஆணையிட்டுள்ளது.
இதற்கிடையில் மோடியை விமர்சிக்கும் இந்த ஆவணப்படம் கேரளாவிலும், ஹைதராபாத் பல்கலைக்கழகத்திலும் ஃபிரட்டர்நிட்டி இளைஞர் அமைப்பின் சார்பாக திரையிடப்பட்டது. அதில் அதிகளவில் மாணவர்கள் கலந்துகொண்டுள்ளனர். ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டதற்கு எதிராக ஆர்எஸ்எஸ்-ன் மாணவ அமைப்பான ஏபிவிபி அமைப்பைச் சார்ந்தவர்கள் போராட்டம் நடத்தியதுடன், காவல் நிலையத்தில் வழக்கும் பதிவு செய்துள்ளனர்.
இதேபோல் இந்தியாவின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஜேஎன்யூவில் நேற்று இந்த ஆவணப்படத்தைத் திரையிடுவதற்காகப் பல்கலைக்கழக மாணவ அமைப்புகள் திட்டமிட்டனர். அதைத் தொடர்ந்து அங்கு மின்சாரத்தையும் இணையதள வசதிகளையும் நிர்வாகம் துண்டித்தது. இந்தக் கெடுபிடிகளையும் தாண்டி ஆவணப்படத்தைப் பார்த்த மாணவர்கள் மீது ஏபிவிபி குண்டர்கள் கல் வீசித் தாக்கியுள்ளனர்.
ஏன் இந்த ஆவணப்படத்தை இந்தியாவின் வலதுசாரி அரசும், சங் பரிவார அமைப்புகளும் எதிர்கின்றன?
பிபிசி-ன் இந்த ஆவணப்படம் 2002ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற அனைத்து கோரச் சம்பவங்களையும் சர்வதேச அளவில் அம்பலப்படுத்தும் விதத்தில் அமைக்கிறது. இந்தப் படம் பிரதானமாக இங்கிலாந்து அரசின் வெளியாகாத அறிக்கையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை குஜராத் வன்முறைக்கான நேரடி பொறுப்பாளியாக தற்போதைய இந்தியப் பிரதமர் மோடியைக் குற்றம் சாட்டுகிறது.
2002ல் சபர்மதி விரைவு வண்டியில் சென்ற 50க்கும் மேற்பட்ட இந்துக்கள் கோத்ரா பகுதியில் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தனர். இந்த விபத்திற்கான தகுந்த நேரடி காரணம் சரியாக கண்டுபிடிக்கப்படாமலும் பல விவாதங்களுக்கும் உள்ளாகிக் கொண்டிருந்த நிலையிலேயே அதற்கான காரணம் முஸ்லிம்கள்தான் என்று கட்டிவிடப்பட்ட கதையைத் தொடர்ந்து இக்கலவரம் குஜராத் மாநிலம் முழுவதும் வெடித்தது.
எந்த ஒரு கலவரத்தையும் ஓரிரு மணி நேரதிற்குள் மாநில அரசு மற்றும் காவல் துறையினரால் தடுத்து நிறுத்த முடியும் ஆனால் குஜராத் கலவரமானது ஏறத்தாழ மூன்று நாட்களுக்கும் மேலாக நடந்தது. இந்த கலவரத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை என்று அப்போதைய குஜராதின் மோடி அரசு கூறியதெல்லாம் முழு பூசனிக்காயை ஒரு தட்டு சோற்றில் மறைத்ததே அன்றி வேறில்லை.
இந்த கலவரத்தில் ஏறத்தாழ 2500 மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டும், முஸ்லிம் பெண்கள் மற்றும் குழந்தைகள் மானபங்கப்படுத்தப்பட்டும், பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்டனர்.
இந்த ஆவணப்படம் அவ்வன்முறைகள் எவ்வாறெல்லாம் கட்டவிழ்த்து விடப்பட்டது. வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்கள், அப்போதைய குஜராத்தின் முதல்வர் நரேந்திர மோடி காவல் துறையினருக்கு இந்த கலவரத்தை தடுக்க வேண்டாம் என்று உத்தரவிட்டது. கலவரம் நடக்கும் பொழுது அதனை தடுக்காமல் காவல்துறையினர் வேடிக்கை பார்ப்பது போன்ற அனைத்து விஷயங்களையும் ஆதாரப்பூர்வமாக முன்வைக்கிறது.
சமீபத்தில் கூட இக்கலவரத்தின் போதே தன்னுடைய முழு குடும்பத்தினரும் கொல்லப்பட்டு பிறகு தானும், பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு அப்போது தன்னுடைய வயிற்றிலிருந்த குழந்தையும் இழந்த பில்கிஸ் பானோவின் வழக்கில் அவருக்கு எதிராகவே தீர்ப்பு வழங்கப்பட்டது அவருக்கு இவ்வளவு பெரிய கொடுமைகளையெல்லாம் செய்த நபர்கள் சிறையிலிருந்து விடுதலையாகினர்.
தற்போது இந்தியாவில் இயங்கி வரும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தலைமையிலான அரசனது ஒரு இனவாத கொள்கையின் அடிப்படையிலானது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இதனுடைய கொள்கைகளின் மூலமானது ஐரோப்பாவில் உருவான பாசிச மற்றும் நாசிச கொள்கைகளே ஆகும். நம்முடைய இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடுதான் ஆனாலும் எப்படி இந்த பாசிச கொள்கையையுடைய இவர்கள் இன்னும் ஆட்சிக் கட்டிலில் இருக்கின்றார்கள் என்று பார்த்தால் நமது சட்டத்தில் இருக்கும் ஓட்டைகள சரியாக பயன்படுத்தியே என்றுதான் கூற முடியும்.
இந்த இந்துத்துவ அமைப்பு தற்போது இந்தியாவில் இந்த அளவிற்கு வேரூன்றுவதற்கான ஒரு முக்கியமான காரணமே இந்த குஜராத் வன்முறைதான். இந்த ஆவணப்படமானது மோடியை இந்த நாசகர அமைப்பின் தரமான தயாரிப்பு என்று சாடுகிறது மேலும் இதை நடத்தி முடித்ததில் மோடியின் பங்கு அளப்பரியது என்றும் கூறுகிறது.
இப்படியெல்லாம் அந்த மாபெரும் குற்றச்செயலைச் செய்த மற்றும் அதற்கு காரணமாகவும் இருந்த தற்போதைய நம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் முகத்திரையைக் கிழிப்பதாக அமைந்திருப்பதாலேயே இந்த ஆவணப்படம் நம் இந்திய அரசு மற்றும் வலதுசாரி ஆர்எஸ்எஸ் பிஜேபி மற்றும் அது சார்ந்த அமைப்புகளின் மூலம் எதிர்க்கப்படுகிறது.
இந்த ஆவணப்படத்தின் மீது விதிக்கப்பட்டிருக்கும் அவசரகால தணிக்கை என்பதானது இந்தியாவில் ஆளும் பெரும்பான்மை கட்சியின் மூலம் சிறுபான்மையான முஸ்லிம்கள் எப்படியெல்லாம் வஞ்சிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை மறைப்பதற்காக தான் என்று அப்பட்டமாக தெரிகிறது. இதுபோன்று சமீபத்தில் வெளியான இந்தியச் சட்டமன்றத்தின் முடிவுகள் பலவும் இந்தியா தன்னுடைய மதசார்பற்ற ஜனநாயகத் தன்மையிலிருந்து விலகுவதை உறுதி செய்வதாகவே அமைகின்றது.