“அப்துல் ரவுப்” – விசாரணை திரைப்படத்தின் அப்சல் கதாபாத்திரத்தின் நீட்டிப்புப் பாத்திரம். அப்துலும் அப்சலும் இதுவரை திரையில் வெவ்வேறு வடிவங்களில் நீங்கள் சந்தித்திருக்கலாம். பெரும்பாலும் அவர்கள் பயங்கரவாதிகளாகவே காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அதே அப்துல்களும் அப்சல்களும் விசாரணை கைதிகளாக இருப்பது உங்களுக்குத் தெரியுமா?
“சிறை” எழுப்பும் கேள்விகள் மிகவும் முக்கியமானவை. பார்வையாளர்களால் பதில் கூற முடியாத கேள்விகள் அவை. பார்வையாளர்களின் கூட்டத்தின் பெரும் கைதட்டல்களுக்கிடையே, ஒருவகை பெரும் குற்றுணர்ச்சியும் வெளிப்பட்டதை காண முடிந்தது. அந்த குற்றுணர்ச்சிக்கான காரணத்தை பின்வரும் வரிகளில் கூற முயல்கிறேன்.
படத்தில் வரும் அப்துல் எனும் கதாபாத்திரம், போலீஸ் காவலில் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். செல்லும் வழியில், போலீஸ் அதிகாரிகளின் அதீத கவனக்குறைவால் அப்துலுக்கு தப்பிச் செல்லும் ஒரு அரிய வாய்ப்பு கிடைக்கிறது. தப்பிக்க முயற்சித்தாலும், பின்னர் அவன் பின்வாங்குகிறான். அவனது முடிவை மாற்றியது என்ன? “எப்படியும் பிடிபட்டுவிடுவோம்” என்ற பயமா? அல்லது வேறு ஏதும் காரணமா?
கதைக்களம் நடைபெறும் காலம் 2003. இன்றுள்ள காவல் துறையின் அதிநவீன வசதிகள் அப்போது இருந்தனவா என்பது சந்தேகமே. அப்படியே தப்பித்திருந்தாலும், அந்தப் பயம் அப்துலுக்கு இருந்திருக்க வாய்ப்பு இல்லை! ஏன் என்றால், தப்பிக்க வழி இருந்தும் ஏன் தப்பிக்கவில்லை என்ற நாயகனின் கேள்விக்கு, அப்துல் கூறும் பதில் மிகவும் முக்கியமானது: “இந்த ‘அப்துல்’னு பேரை வெச்சுக்கிட்டு வெளியே தப்பிச்சி வாழ்ந்திட முடியுமா?” ஏன் அப்துல் என்ற பெயரை வைத்துக்கொண்டு வெளியே வாழ முடியாதா? இந்தக் கேள்விக்கான விடை கிடைத்தால், பார்வையாளர்களின் குற்றுணர்ச்சிக்கும் விடை கிடைத்துவிடும். ஒருவேளை அப்துல் தப்பித்து சென்னை வந்திருந்தால், அவனுக்கு எளிதாக வாடகைக்கு வீடு கொடுத்திருப்பார்களா? தமிழ்நாட்டிலேயே இந்த நிலைமை என்றால், அப்போது பிற மாநிலங்களுக்கு சென்றிருந்தால் அதை கற்பனை செய்வதே கடினம்.
உண்மையில் “சிறை” 1997லிருந்து தனது கதையைத் தொடங்குகிறது. திரைக்கதையின் வேகமான ஓட்டத்தில் வரும் வசனங்களை அவ்வளவு எளிதாகக் கடந்து செல்ல முடியவில்லை. குறிப்பாக, குறைந்த நிமிடங்களே திரையில் தோன்றும் மூணார் ரமேஷ் பேசும் வசனங்கள் படத்தின் ஒட்டுமொத்த திசையையும் மாற்றி பெரும் விவாதத்தை எழுப்புகின்றன. 1998 கோவை குண்டுவெடிப்பு சம்பவம் மற்றும் விசாரணை கைதிகள் பற்றிய அணுகுமுறை மிகவும் கவனமாகவும் நேர்மையாகவும் அமைந்துள்ளது வரவேற்கத்தக்கது.
2012க்கு பிறகான தமிழ் சினிமாவில், குறிப்பாக ரஞ்சித், மாரி, வெற்றிமாறன் ஆகியோரின் வருகைக்குப் பிறகு ஒரு பெரும் புரட்சி நிகழ்ந்துள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வலிகளை திரைமொழி எனும் பேராயுதத்தின் மூலம் தொடர்ச்சியாக இவர்கள் காட்சிப்படுத்தி வருகின்றனர். அந்த வரிசையில், இயக்குனர் தமிழ் மற்றும் இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி இணைந்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.

