காஸா பகுதிக்குள் எந்த ஒரு அத்தியாவசியப் பொருட்களையும் செல்ல விடாமல் கடல், வான், தரை வழி என அனைத்தையும் முற்றுகையிட்டு பல ஆயிரம் அப்பாவி மக்களையும் பச்சிளம் குழந்தைகளையும் கொன்று குவித்த இஸ்ரேலைக் கண்டித்து, எந்த ஒரு தீவிர முயற்சியும் எடுத்திடாத உலக நாடுகள், ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியதும் உடனடியாக போரை முடிக்க அமெரிக்காவிற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.
காஸா முற்றுகை என்பது இனப்படுகொலை தொடங்கிய இரண்டு ஆண்டுகளாக மட்டும் நீடிக்கவில்லை; மாறாக, அது 2007 ஆம் ஆண்டு ஹமாஸ் போராட்டக் குழுவின் அரசியல் பிரிவு தேர்தலில் வெற்றி பெற்றது முதல் இன்று வரை நீடிக்கிறது. சர்வதேச சட்டங்களை மீறி காஸாவின் கடல், வான், தரை வழித்தடங்களை இஸ்ரேல் முற்றுகையிட்டு காஸாவை ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலையாகவே நடத்தி வந்தது.
காஸா ஃப்ளோடிலா என்னும் பெயரில் 2010 மே மாதம் துருக்கியைச் சேர்ந்த ஆர்வலர்கள் மாவி மர்மாரா என்ற கப்பலில் காஸாவை சென்றடைந்து முற்றுகையை முறியடிக்க முயற்சி செய்தனர்; அவர்களில் 9 நபர்களை சுட்டுக் கொன்றது இஸ்ரேலிய இராணுவம்.
அதேபோல், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பாலஸ்தீன், லெபனான், ஏமன், சிரியா, மற்றும் ஈரான் ஆகிய அண்டை நாடுகளில் சர்வதேச விதிகளை மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இவை இரண்டும் சர்வதேச நாடுகளை நேரடியாக பாதிக்காததனால் இஸ்ரேலுக்கு எதிராக எந்த ஒரு தீவிர நடவடிக்கையும் எடுக்காமல் சில சடங்கு ரீதியான அக்கறையை மட்டுமே வெளிப்படுத்தினர்.
ஆனால் அமெரிக்கா-ஈரான் போரால் ஹோர்முஸ் நீரிணையில் ஏற்படும் சிறு இடையூறு கூட மேற்குலகம், அரபு நாடுகள் உட்பட அனைத்து நாடுகளையும் தீவிர போர் நிறுத்த முயற்சிக்கு நகர்த்தியது.
ஏனென்றால், இது அந்த நாடுகளில் பொருளாதாரம், சந்தை வீழ்ச்சி, விலை உயர்வு என அனைத்து வகைகளிலும் கடுமையாக பாதித்துள்ளது. ஏனெனில், உலகின் மூன்றில் ஒரு பங்கு உர வர்த்தகம் பொதுவாக இந்த நீரிணை வழியாகவே நடைபெறுகிறது. மேலும் உணவு, மருந்துகள், தொழில்நுட்பப் பொருட்கள் உள்ளிட்டவற்றை மத்திய கிழக்கு நாடுகளுக்கு இறக்குமதி செய்வதற்கான ஒரு முக்கிய வழித்தடமாகவும் இந்த நீரிணை விளங்குகிறது.
அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாகத்தின் (EIA) மதிப்பீடுகளின்படி, 2025-ஆம் ஆண்டில், ஒரு நாளைக்கு சுமார் 20 மில்லியன் பீப்பாய் எண்ணெய் மற்றும் எண்ணெய் பொருட்கள் ஹார்முஸ் நீரிணை வழியாகக் கடந்து சென்றன. இது ஆண்டுக்கு கிட்டத்தட்ட 600 பில்லியன் டாலர் (447 பில்லியன் பவுண்ட்) மதிப்புள்ள எரிசக்தி வர்த்தகமாகும்.
20% உலகளாவிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LPG), 20% உலகளாவிய எண்ணெய் நுகர்வு ஹார்முஸ் நீரிணை வழியாகத் தான் கடந்து செல்கின்றன.
நம் நூற்றாண்டில் பொருளாதார நிலையற்ற தன்மை சகித்துக் கொள்ள முடியாததாகவும் மனித உயிர்கள் பேரம் பேசக் கூடியதாகவும் மாறியிருப்பது மிக பெரிய அவலம்.
ஸியோனிச இஸ்ரேலின் தூண்டுதலின் பேரில் ஈரான் மீது சட்டவிரோதமாகப் போர் தொடுத்த அமெரிக்கா தனது பெரும் ராணுவ பலத்தை பயன்படுத்தி ஹார்முஸ் நீரிணையை 60 நாட்களைக் கடந்தும் திறக்க இயலாமல் படுதோல்வி அடைந்தது. மேலும் உலக நாடுகளிடமிருந்து அதிகரித்த அழுத்தத்தால் அவசரமாக ஓர் போர் நிறுத்தத்தை கொண்டு வந்தது.
ஆனால் இந்த அவசரம் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக காசாவில் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்து போன குழந்தைகளின் கதறல்களாலோ அல்லது மருத்துவமனைகள், வீடுகள் இடிந்து விழுந்ததாலோ, ஈரானில் பள்ளி குழந்தைகள் கொல்லப்பட்டதாலோ ஏற்படவில்லை.
மனிதாபிமானம் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படும் போது அமைதியும், வர்த்தகம் அச்சுறுத்தப்படும்போது அவசரமும் உடனடியாக வெளிப்படுகிறது. உலகம் தனது மனசாட்சியை சந்தையின் ஓசைகளுக்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொண்டுள்ளது.
இது வெறும் கவனக்குறைவால் ஏற்படுவது அல்ல, தங்கள் தரவரிசையில் எது மிகவும் முக்கியமானது என்பதை வெளிப்படையாக உணர்த்துவது.
காஸாவில் 2.4 மில்லியன் குடியிருப்பாளர்களுக்கான உள்கட்டமைப்பு சிதைந்து கிடைக்கிறது, மருத்துவ அமைப்புகள் முழுமையான சரிவின் விளிம்பில் தள்ளாடுகின்றன. அங்கு நடைபெறும் அவலம் மறைக்கப்பட்டதும் அல்ல, தெளிவற்றதும் அல்ல. இருப்பினும் சர்வதேச அமைப்பின் எதிர்வினை என்பது வெறும் வெற்று அறிக்கைகள் ஆகவும் எந்த பின்விளைவுகளும் அற்ற கண்டனங்களாகத் தான் இருக்கின்றன.
மனிதர்களுக்கு ஏற்படுத்தப்படும் துன்பங்களின் அளவைக்கொண்டு சர்வதேச எதிர்வினைகள் வருவதில்லை, மாறாக பொருளாதார அபாயத்தின் நெருக்கத்தாலேயே ஏற்படுகிறது. உலக அரசியலின் நீதி தராசில் எல்லா ரத்தத்திற்கும் சமமான மதிப்பு இல்லை என்பது தெளிவாகியுள்ளது.
கூட்டணியை திரட்டி கடற்படைகளை உருவாக்க எண்ணெய்க்கு சக்தி உள்ளது, ஆனால் குழந்தைகளின் மரணங்கள் எந்தவொரு பொருளாதார உறவுகளையோ, விநியோக சங்கிலிகளையோ தடை செய்வதில்லை.
போர்கள் அநீதியானவையாக இருக்கும்போது அவை எதிர்க்கப்படுவதில்லை.
மாறாக அவை சிரமமாக இருக்கும்போது தான் எதிர்க்கப்படுகின்றன; இது இன்றையக் காலத்தின் எழுதப்படாத கோட்பாடாக மாறிவிட்டது.
எண்ணெய்க்காக அணி திரண்டு ரத்தத்திற்காக போராடாத ஒரு நாகரிகம் வெறுமனே முரணானது மட்டுமல்ல, அது மிகவும் ஆபத்தானதும் கூட, ஏனெனில் கருணை நிபந்தனைக்குட்பட்டதாகவும் நீதி தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் மாறும் போது சட்டபூர்வமான தன்மையில் அடித்தளங்களே அரிக்கத் தொடங்குகின்றன.
இறுதித் தீர்ப்பில், எந்தவொரு நாகரிகமும் அதன் கருவூலங்களின் செழிப்பையோ அல்லது எண்ணெய் வழித்தடங்களின் பாதுகாப்பையோ கொண்டு மதிப்பிடப்படாது; மாறாக, அது மனித உயிருக்கு அளித்த முக்கியத்துவத்தைக் கொண்டே மதிப்பிடப்படும்.
– ரியாஸ் மொய்தீன்
![]()
