பிரதமர் நிவாரண நிதி (PM CARES) தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் கோரி மாநிலங்களவைத் தலைவருக்கும் மக்களவை சபாநாயகருக்கும் சிபிஎம் மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் ஜான் பிரிட்டாஸ் எழுதிய கடிதம் மீண்டும் விவாதத்தைத் தூண்டியுள்ளது. பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலை நிவாரணம் (PM CARES), பிரதமரின் தேசிய நிவாரண நிதி (PMNRF) மற்றும் தேசிய பாதுகாப்பு நிதி (NDF) ஆகிய மூன்று நிதிகளின் விவரங்களை நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்தும் பொது மக்களிடமிருந்தும் மறைப்பது என்றும், நாடாளுமன்றத்தில் இந்த நிதிகள் குறித்த கேள்விகளை அனுமதிக்க வேண்டாம் என்று பிரதமர் அலுவலகம் (PMO) அறிவுறுத்தல்களை பிறப்பித்துள்ளதாகவும் வெளியான தகவல்கள் மூலம் இந்த விவகாரம் மீண்டும் ஒருமுறை பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பிப்ரவரி 9ஆம் தேதி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியான ஒரு செய்தியின்படி, மக்களவை நடைமுறை விதிகளின் விதி 41இன் துணைப் பிரிவுகளின் கீழ் மேற்படி நிதிகள் குறித்த எந்த கேள்விகளையும் எழுப்ப முடியாது என்றும், அவற்றை நிராகரிக்க வேண்டும் என்றும் பிரதமர் அலுவலகம் ஜனவரி 30ஆம் தேதி மக்களவை செயலகத்திற்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது.
PM CARES போன்ற நிதிகள் குறித்த கேள்விகளை நிராகரிக்கும் அரசாங்கத்தின் முன்மொழிவுகளை அவைத் தலைவர்கள் நிராகரிக்க வேண்டும். மேலும் அவற்றைத் தெரிந்துகொள்ள நாடாளுமன்றத்திற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளைதான் மாநிலங்களவை உறுப்பினர் பிரிட்டாஸ் எழுப்பினார். மக்கள் பிரதிநிதிகளுக்கு அத்தகைய நிதிகள் பற்றிய எந்தத் தகவலையும் அறிய உரிமை உண்டு என்பதை ஒன்றிய அரசு ஏன் ஏற்க மறுக்கிறது என்பதன் காரணம் மர்மமாகவே உள்ளது.
இது அரசு கருவூலத்தில் உள்ள மற்ற பணத்தைப் போல மத்திய அரசின் ஒருங்கிணைந்த நிதியைச் சேர்ந்தது அல்ல. மேலும் அரசுத் துறைகள் அல்லது பொதுத்துறை நிறுவனங்களால் நிர்வகிக்கப்படுவதில்லை. எனவே அரசு செலவினங்களைத் தணிக்கை செய்வது போன்ற தணிக்கைக்கு உட்பட்டது அல்ல இந்த நிதி என்பதே இது தொடர்பான மோடி அரசின் நிலைப்பாடு. இந்த நிதி திட்டத்தின் வருமானம், செலவினங்கள் தொடர்பான அனைத்து உண்மைகளையும் உலகத்தின் கண்களில் இருந்து மறைப்பதற்கான சால்ஜாப்புகள் மட்டுமே பிரதமர் அலுவலகம் சொல்லும் நியாயப்படுத்தல்கள் என்று சந்தேம் எழுகிறது..
மார்ச் 28, 2020 அன்று மத்திய பெருநிறுவன விவகார அமைச்சகம் அனுப்பிய குறிப்பில், PM CARES ஒன்றிய அரசால் பொது நிவாரணத்திற்காக உருவாக்கப்பட்ட நிதி என்றும் எனவே அது பெருநிறுவன சமூகப் பொறுப்புச் செலவு (CSR) நிதி பங்களிப்பிற்கு தகுதியுடையவை என்றும் கூறுகிறது.
இந்த நிதியின் மீதும் அரசிற்கு நேரடி கட்டுப்பாடு இருக்க வேண்டும். ஆனால் அதைத் தணிக்கை செய்ய முடியாது என்பதுதான் ஒன்றிய அரசின் நிலைப்பாடு. தேர்தல் பத்திரங்களைப் போன்று பல்வேறு நிறுவனங்களிடமிருந்து நன்கொடைகளை பெறுதற்கான ஒரு வழியாக இந்த நிதி திட்டத்தை வைத்திருக்கவும், அரசு விரும்பும் வழியில் அதை ஆய்வு இல்லாமல் செலவிடவும் அரசு சுதந்திரம் கோருகிறது. வெளிப்படைத்தன்மை பற்றி பெருமை பேசும் மோடி அரசு, தாங்கள் தொடங்கிய, அரசு, அமைச்சர்கள், அதிகாரிகளால் நேரடியாக மேற்பார்வையிடப்படும் பல ஆயிரம் கோடி ரூபாய்கள் பரிவர்த்தனைகள் செய்யப்படும் திட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்கக் கூடாது என்று மிரட்டுகிறது. ஒவ்வொரு நிதியாண்டிற்கும் பெறப்பட்ட, செலவிடப்பட்ட பணத்தின் அளவைக் குறித்து இத்திட்டத்தின் வலைதளங்கள் சில தகவல்களை வழங்குகிறது. அதைத் தவிர வேறு எந்த தகவலும் கிடைக்கவில்லை. யாரெல்லாம் நன்கொடை அளித்தார்கள், திட்டத்தின் பயனாளிகள் யார் என்பது குறித்தெல்லாம் தெளிவில்லை.
PM CARES என்பது 2000ஆம் ஆண்டு கோவிட் காலத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு அறக்கட்டளை என்று வலைத்தளம் கூறுகிறது. இது அதன் நோக்கங்களையும் கூறுகிறது. பிரதமர் தலைவராகவும் உள்துறை, பாதுகாப்பு, நிதி அமைச்சர்கள் அலுவல்சாரா உறுப்பினர்களாகவும் இருப்பார்கள். பிரதமரால் பரிந்துரைக்கப்படும் மேலும் இரண்டு உறுப்பினர்கள் உள்ளனர். மற்ற அரசு தொண்டு நிதிகளைப் போலவே இந்த நிதி திட்டத்திற்கு நன்கொடைகளுக்கும் 100 சதவீத வருமான வரி விலக்கு அளிக்கப்படும். இத்திட்டத்திற்கு வெளிநாட்டு பங்களிப்புச் சட்டத்தின் (FCRA) கீழும் விரைவான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. PM CARES எனும் இத்திட்டத்திற்கு நிதி அளிப்பதற்காக மட்டுமே 2013இல் நிறுவனங்கள் சட்டம் திருத்தப்பட்டது. அதன் மூலம் பெருநிறுவன சமூகப் பொறுப்பு பங்களிப்பு நிதிகளுக்கும் PM CARES தகுதியுடையதாக மாறியது.
இவ்வாறு இந்த அமைப்பு நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் கீழ் ஒன்றிய அரசால் உருவாக்கப்பட்டது. திட்டத்தின் செயல்பாடுகளில் பிரதமர் உட்பட ஒன்றிய அரசின் முதன்மை பொறுப்புகளில் உள்ளவர்கள் தலைமை வகிக்கின்ற பொழுது, பிரதமர் அலுவலகத்தின் முகவரி உள்ள, பிரதமர் அலுவலகத்திலேயே செயலாளர்/ அடிஷனல் செயலாளர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் உள்ள ஒரு சட்டபூர்வமான நிறுவனத்தின் வெளிப்படைத்தன்மை மறைக்கப்பட வேண்டும் என ஒன்றிய அரசு பிடிவாதமாக இருக்கிறது. தகவல்களை மறைக்கத் துடிக்கும் இந்த ஆர்வம் காரணமாக இதற்கு பின்னால் என்னவோ உள்ளது என குடிமக்கள் ஐயம் கொண்டால், அவர்களை குறை சொல்ல முடியுமா? எழுப்பப்படும் கேள்விகளுக்கு ஒன்றிய அரசு திருப்திகரமான பதில் அளிக்க வேண்டும். PM CARES விஷயத்தில் ஒன்றிய அரசு வெளிப்படைத்தன்மையை அனுமதிக்க வேண்டும்.

