• முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
Facebook Instagram YouTube WhatsApp
சகோதரன்சகோதரன்
Facebook Instagram YouTube WhatsApp
  • முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
சகோதரன்சகோதரன்
Home»கட்டுரைகள்»தற்காலச் சூழலில் மகாத்மா பூலேவை வாசிப்பதின் முக்கியத்துவம்
கட்டுரைகள்

தற்காலச் சூழலில் மகாத்மா பூலேவை வாசிப்பதின் முக்கியத்துவம்

பள்ளிகொண்ட மணிகண்டாBy பள்ளிகொண்ட மணிகண்டாMay 6, 2025No Comments5 Mins Read
Share
Facebook Twitter Telegram WhatsApp Email

நம் காலத்தில் வாசிப்பு என்பதன் பொருள் பொதுவாக என்னவாக உள்ளது? இந்தக் கேள்வி, நாம் வாசிப்பதே இல்லை என்பதை நிறுவுவதற்காக அல்ல. மாறாக, நாம் எதை வாசிக்கின்றோம் என்பதை குறித்தானது. வாசிப்பு என்பது புரிதல், அறிதல், உணர்தல், முனைப்பு போன்ற கூறுகளின் வழியே வருகிறது. வாசிப்பின் வழி ஆறுதலையும், வாழ்க்கையின் அர்த்தத்தையும், மிக முக்கியமாக உளப்பூர்வமான அறிவார்ந்த வாழ்வையும் நாம் காண்கிறோம்.

ஆனால் இன்று நாம் வாசிப்பின் புரட்சிகர ஆற்றலை இழந்துவிட்டோம். வாசிப்பின் நோக்கம் என்பது வெறுமனே அறிவை பெற்றுக்கொள்ளுதல் மட்டுமல்ல; மாறாக தேடுதலை நோக்கி நகர்வதே – அதாவது செயல்படுதல் எனும் பண்பை உருவாக்குவதே – ஆகும்.

இதற்காகவே புரிதல், அறிதல், உணர்தல் மற்றும் செயல்பட முனைதல் ஆகிய வாசிப்பின் கூறுகளை மகாத்மா ஜோதிபா பூலே அவர்கள் நமக்கு வழங்கினார். அவரது வாழ்க்கையும் எழுத்துக்களும் கூட ‘கற்றலின் மீதான ஆர்வத்தின்’ (taste for learning – பூலேவின் எழுத்துக்களின் அதிகம் பயன்படுத்திய சொற்றொடர்) முக்கியத்துவத்தை நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.

சகிப்புத்தன்மை அற்ற இந்த காலத்தில், பிற்போக்குத்தனமான தகவல்களின் பகிர்வு சாதாரணமாகிவிட்ட இந்த சூழலில் பூலேவின் எழுத்துக்கள் மீதான வாசிப்பும் புரிதலும் கடினமானதாகவும் தெய்வ நிந்தனைச் செயலாகவும் கருதப்பபட வாய்ப்புள்ளது.

சமீபத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய “பூலே” திரைப்படமும் அதில் தங்களை தவறாக சித்தரித்துள்ளதாக கூறும் பிராமண சமூகத்தின் கருத்தும் இதற்கு மிகமுக்கிய எடுத்துக்காட்டு. ஒரு சிந்தனையாளரால் முன்பே எழுதப்பட்ட, மனிதாபிமானமற்ற சாதிய அமைப்பு குறித்தும் அதை நிலைநிறுத்திய முகவர்கள் பற்றியும் இப்போது எப்படி தலைகீழாக மாற்றவோ அல்லது பூசி மறைக்கவோ முடியும்?

இது ஒருபுறம் இருக்க, மகாராஷ்டிர அரசோ ஜோதிபா பூலே மற்றும் சாவித்திரிபாய் பூலே ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

பூலே தம்பதியர் எதை பற்றி எழுதினர்; எதற்கு ஆதரவாகவும் எதற்கு எதிராகவும் போராடினர் என்பது குறித்து மாநில அரசோ ஒன்றிய அரசோ அறியாமலா உள்ளன? ஒருவேளை இதை அறியாமை என ஒருவர் நினைத்தால் நிச்சயமாக அவரது எண்ணம் தவறே.

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) துணைப் பிரிவுகளை வகைப்படுத்துதல் உள்ளிட்ட பிரச்சனைகளை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு பாரத ரத்னா விருதினை அரசு அறிவித்தால், அதற்கு பிராமண சமூகம் எதிர்ப்பு தெரிவிக்குமா?

அப்படிப்பட்ட சூழ்நிலையில், போராட்டக்காரர்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நிகழ்த்துமானால் அது ஒரு குழப்பமான சூழலையே உருவாக்கும்.

மேலும், இங்கே ஒரு முக்கியக் கேள்வி எஞ்சியுள்ளது. இந்த நாடு பூலே தம்பதியரை எப்படி வாசிக்கவும் புரிந்துகொள்ளவும் விரும்புகிறது? ஒருவேளை சாவித்ரிபாய் மற்றும் ஜோதிபா பூலே இருவருக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டால் – அது அவர்களை மேலும் பிரபலமாக்கும் – இதன் காரணமாக நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைச் சேர்ப்பதில் அரசாங்கம் ஆர்வம் காட்டுமா?

அரசு அவர்களை ஒரு சாதாரண சமூக சீர்திருத்தவாதிகளாக அறிமுகப்படுத்துமா? அல்லது புரட்சிகர கல்விச் சிந்தனையாளர்களாக அறிமுகப்படுத்துமா? பூலே தம்பதியர் ‘பெரும்பாலான மக்களுக்கான கல்வி’ (குறிப்பாக அடிப்படை/ஆரம்பக் கல்வி)க்கு கொடுத்த ஆதரவையும் ‘குறிப்பிடத்தக்க சிலருக்கான அதிகக் கல்வி’ (உயர் கல்வி)க்கு எதிராக முன்வைத்த விமர்சனங்களையும் அங்கீகரிப்பார்களா? பிராமண பெண்களின் நலனுக்காக பூலே தம்பதியர் செய்த பங்களிப்புகளை ஏற்பார்களா? அவர்கள் ஏற்றுக்கொண்ட சத்தியத்தை தேடும் இலட்சியக் கொள்கையை புரிந்துகொள்வார்களா? ‘சத்தியமே அறிவு, அறிவே சத்தியம்’ என்ற அவர்களின் குறிக்கோளை ஏற்றுக்கொள்வார்களா?

மேலே குறிப்பிட்டுள்ள கேள்விகள் கல்வி, அரசியல், கலாச்சாரத் துறைகளில் பூலே தம்பதியரின் பெயர்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதன் பின்னணியில் இருந்து எழுகின்றன. உதாரணமாக, பல கல்வி நிறுவனங்கள் பாபாசாகேப் அம்பேத்கரின் பிறந்த நாளை அதிகாரப்பூர்வமாகக் கொண்டாடுகின்றன, ஆனால், ஜோதிபா மற்றும் சாவித்திரிபாய் பூலேவின் பிறந்த நாட்கள் பற்றிய விழிப்புணர்வோ அங்கு காணப்படுவது இல்லை. வளர்ந்து வரும் பகுத்தறிவிற்கு முரணான சிந்தனைகள் மற்றும் ஒழுக்கமின்மைக்கு மருந்தாக பூலே தம்பதியரை அறிமுகப்படுத்த வேண்டிய அவசரத் தேவை தற்பொழுது எழுந்துள்ளது. இந்த சூழலிலும் கூட, பல பொதுக் கல்வி நிறுவனங்கள் இவர்களை குறித்து அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை.

ஜோதிபா பூலே தனது எழுத்தின் வழியே தத்துவம், அரசியல் சார்ந்து எழுப்பிய கேள்விகளை அணுகுவதற்கு நாம் கொஞ்ச நேரம் ஒதுக்குவோம். அக்கேள்விகள் இன்றும் தாக்கம் செலுத்தக்கூடியவையாக உள்ளன. 1873இல் வெளிவந்த குலாம்கிரி (அடிமைத்தனம்) எனும் அவரது முக்கியமான நூலில் ‘அவதாரகல்பனா’ (விஷ்ணுவின் பத்து அவதாரங்கள்) எனும் புராணத்தின் உண்மைத்தன்மையை கேள்விக்குட்படுத்தி இயற்கை மற்றும் அறிவியலின் மூலம் சத்தியத்தை அடைய முனைந்தார் பூலே.

குலாம்கிரியை இன்னும் ஆழ்ந்து வாசிக்கும் பட்சத்தில் பூலே எழுப்பும் சில முக்கிய கேள்விகளை காணலாம். உதாரணமாக, ‘பெயரிடுவதின் அரசியல்’ என்பது ஒரு நபரையோ குழுவையோ என்ன செய்கிறது? பிராமணர்கள், சூத்திரர்கள்-அதிசூத்திரர்களிடம் காணப்படும் வேறுபட்ட பழக்கவழக்கங்களை அங்கீகரிப்பதன் முக்கியத்துவம் என்ன? “போக்கு மற்றும் செயல்பாட்டின் அடிப்படையில் மோசமான மதகுருத்துவமானது” ஓய்வு வாழ்வை எப்படி தனதாக்கிக் கொள்கிறது?

பொய்யான புராணங்களும் கட்டுக்கதைகளும் எவ்வாறு அறியாமையிலுள்ள மக்களின் மனங்களை ஏமாற்றுகின்றன? ஏன் இன்னும் இந்திய விவசாயிகள் (சூத்திர-அதிசூத்திர விவசாயிகளும் நிலமற்ற விவசாய தொழிலார்களும்) பழமொழியில் வரும் கறவை மாடுகளாகவே உள்ளனர்? சூத்திரர்கள்-அதிசூத்திரர்களின் வாழ்க்கையில் பிராமணர்கள் இன்னும் முதன்மையும் முக்கியத்துவமும் வாய்ந்தவர்களாக உள்ளனரா?

கல்வியின் மூலம் வாழ்க்கையை நடத்தும் த்விஜர்களுக்கு (பிராமணர், சத்ரியர், வைஷ்ணவர் – இவர்களை pen-wielding butchers அதாவது எழுதுகோல் ஏந்திய கொலையாளிகள் என பூலே தனது எழுத்துகளில் குறிப்பிடுகிறார்) உதவும் அறிஞர்களை உருவாக்குவதற்கு உயர்கல்வி உள்ளது! ஆனால், மக்களுக்கு (சூத்திரர்கள்-அதிசூத்திரர்கள்) அடிப்படை கல்விக்கூட முழுமையாக மறுக்கப்படுவது ஏன்? எனும் கேள்வியையும் இப்புத்தகம் எழுப்புகிறது.

ஒருவரின் சுதந்திரமும் அறிவும் பறிக்கப்படுவதால் ஏற்படும் விளைவுகள் என்ன? பிராமண ஆண்களால் இயற்றப்பட்ட சாஸ்திரங்கள் அனைத்தும் கடவுளால் எழுதப்பட்டவை என (இன்றைய இளம் தலைமுறையினர் வரை) நம்பவைக்கப்படுவது ஏன்? சமூக மற்றும் நெறிசார் சீரமைப்புக்கான சகோதரத்துவ உணர்வை நாம் எவ்வாறு உருவாக்குவது? சுதந்திரமான உள்ளம் எழுதுவதிலும் பேசுவதிலும் உள்ள இடர்பாடுகளை நீக்குமா? இதன் மூலம் ஒருவர் தனது உரிமைகளை கேட்டுப் பெற்றுக்கொள்ள முடியுமா?

ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த ஒருவராவது நகராட்சி, கல்வித் துறை, பொறியியல் துறை, வருவாய்த் துறை, பத்திரிகைத் துறை போன்றவற்றில் உறுப்பினராக இருக்க வேண்டியதன் அவசியம் என்ன? சூத்திரர்கள்-அதிசூத்திரர்கள் தங்களது ஒற்றுமையை ஏன்? எப்படி? இழந்தனர்.

இந்தியாவில் ‘தொழிலின் மதிப்பு’ (dignity of labour) என்பது சாதியுடன் இயற்கையாகவே பின்னிப் பிணைந்திருப்பதை நாம் அறிவோம். பூலே தம்பதியரின் எழுத்துக்களை வாசிக்கும் போது பட் பிரிவு பிராமணர்களை உழைப்பற்ற ஓய்வு எடுக்கும் வகுப்பினராய் குறிப்பிட்டுள்ளதில் இருந்து இதை நாம் விளங்கிக்கொள்ளலாம். இந்த சூழலில் குலாம்கிரி மேலும் நம்மை கேள்விகளை கேட்கத் தூண்டுகிறது. இங்கு ‘உழைப்பே வாழ்வு’ என்பதையும், ஓய்வே வாழ்வு என்பதற்கு எதிராக ‘தொழிலின் மதிப்பையும்’ எவ்வாறு கட்டியெழுப்புவது?

ஓய்வை பெறுவது அறிவு உற்பத்தியுடன் தொடர்புடையதாக இருந்தாலும், அது வழங்கும் சலுகையையும், பெண்களை வீட்டு வேலைகளை மட்டும் செய்ய அழுத்தம் கொடுக்கும் அதன் இயல்பையும் எப்படி ஒரு வாழ்க்கை முறையாக ஏற்றுக்கொள்வது?

இந்த குழப்பமான காலகட்டத்தில் பூலே தம்பதியரின் எழுத்துக்கள் நம்மை நோக்கி கேட்கும் கேள்வி ஒன்றுதான், அவர்கள் விரும்பிய ‘நல்ல மக்களாக’ இந்தியர்கள் மாறிவிட்டனரா?

கலாச்சார இயக்கமாக இருக்கட்டும் அல்லது சமமான பிரதிநிதித்துவத்துக்கான அரசியல் கோரிக்கையாக இருக்கட்டும் இவை அனைத்தும் மேலே கூறப்பட்ட கேள்விகளாலே வழிநடத்தப்படுகின்றன. சமூக, அரசியல் சிந்தனைகள் ஜனநாயக அரசியலில் எவ்வாறு உருவாகின்றன என்பதை இது வெளிக்காட்டுகிறது. இங்கே, (தேசியம் மற்றும் சிவில் சமூகத்தில்) “அறியாமையின் தருணம்” (the moment of ignorance) என்பது, பூலே தம்பதியரின் கருத்துக்களையும் கேள்விகளையும் அங்கீகரிக்காமல் இருப்பதிலேயே உள்ளது.

ஜோதிபா பூலே தனது எழுத்துக்களில் “உரையாடல் முறை”யை தொடர்ச்சியாக பின்பற்றினார். “சொல் என்பது உரையாடலின் சாரம், ஒரு உண்மையான சொல்லை சொல்வதனால் உலகை மாற்ற இயலும்” எனும் பாவ்லோ ஃபிரெய்ரேவின் கூற்றை பிரதிபலிப்பதாக ஜோதிபாவின் சொல்லும் இருந்தது.

பூலே தம்பதியரின் வாழ்க்கையும் எழுத்துகளையும் நாம் ஏற்க வேண்டுமானால், நாம் வாழும் யதார்த்தமாக்கப்பட்ட ஒடுக்குமுறை அமைப்புகளுக்கு எதிராக செயல்படும் தைரியத்தை ஊட்டக்கூடிய ‘கலாச்சார நடவடிக்கை’ இப்போது அதிகம் தேவைப்படுகிறது. நம் காலத்தில் பூலே தம்பதியர் மீதான வாசிப்பு என்பது பிரிவினைவாத நடவடிக்கையாக அல்லாமல், எதிர்மறையான உரையாடல்களுக்கு (anti-dialogue) எதிரானதாகவும் சகிப்பின்மைக்கு எதிரான நடவடிக்கையாகவும் இருக்க வேண்டும்.

பூலே தம்பதியர் சகோதரத்துவத்தையும் அன்பையும் (சமூக மற்றும் ஒழுக்க சீர்திருத்தத்தை அடிப்படியாகக் கொண்டு) முன்வைத்தனர். இவை நீதியை நிலைநாட்டுவதற்கு இன்றியமையாத காரணிகளாக உள்ளன. மேலும், ‘உண்மையே அறிவு’ (Truth as Knowledge) என்று வலியுறுத்துவதன் மூலமாக போராட்டங்களை கடவுள், ஆன்மீகம் மற்றும் கர்மா கோட்பாட்டின் எல்லைக்கு வெளியே கொண்டு சென்றனர்.

நம் காலத்தின் பூலே தம்பதியரை வாசிப்பதன் மூலம், சாதி எதிர்ப்பு தத்துவதை (anti-caste philosophy) ‘செயல்படுத்துவது’ மட்டுமல்லாமல் சமூக, அரசியல், பொருளாதார முரண்களை கற்றுணர்ந்து அவற்றுக்கு எதிராக செயலாற்றும் பூலே தம்பதியர் உருவாக்க விரும்பிய ‘நல்ல மக்களாக’ (good people) மாறலாம்.

(ஆங்கில மூலம்: The NEWS Minute)

(தமிழாக்கம்: முகமது தௌபிக்)

இந்தியா கல்வி சாதி பூலே
Share. Facebook Twitter Telegram WhatsApp Email
பள்ளிகொண்ட மணிகண்டா

தெலுங்கானவைச் சேர்ந்த பூலே-அம்பேத்கரிய ஆய்வாளர். பூலே அம்பேத்கர் தத்துவ மற்றும் ஆங்கிலப் பயிற்சி மையத்தின் (PACPET, தெல்லாப்பூர், ஹைதராபாத்) இணை நிறுவனராகவும் ஆசிரியராகவும் உள்ளார்.

Related Posts

இட ஒதுக்கீடு: ஓர் அறிமுகம்

May 2, 2025

வக்ஃப் கருப்புச் சட்டமும் நாம் செய்ய வேண்டியவையும்

April 24, 2025

இந்த ‘தேச விரோதி’யின் போராட்டம் இன்னும் முடியவில்லை

April 23, 2025

நாம் ஏன் மத்தியப் பல்கலைக்கழகங்களில் படிக்க வேண்டும்?

February 22, 2025

Why You Should Study in Central Universities?

February 20, 2025

காஷ்மீர்: திரைப்படங்களால் திரிக்கப்படும் இராணுவ தேசம் (3)

December 14, 2024

Leave A Reply Cancel Reply

Social Circle
  • Facebook
  • Instagram
  • YouTube
  • WhatsApp
Latest Posts

தற்காலச் சூழலில் மகாத்மா பூலேவை வாசிப்பதின் முக்கியத்துவம்

May 6, 2025

இட ஒதுக்கீடு: ஓர் அறிமுகம்

May 2, 2025

வக்ஃப் கருப்புச் சட்டமும் நாம் செய்ய வேண்டியவையும்

April 24, 2025

இந்த ‘தேச விரோதி’யின் போராட்டம் இன்னும் முடியவில்லை

April 23, 2025
Facebook Instagram YouTube WhatsApp
© 2025 சகோதரன். Customized by Dynamisigns.

Type above and press Enter to search. Press Esc to cancel.