(டில்லியில் தலகோட்ரா அரங்கத்தில் நடந்த வக்ஃப் பாதுகாப்பு மாநாட்டில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமீரே ஜமாஅத் சையத் சஆதத்துல்லாஹ் ஹுசைனி ஆற்றிய எழுச்சியுரையிலிருந்து..)
நாட்டு மக்களை ஏமாற்றுவதற்காக இந்தச் சட்டத்துக்கு உம்மீத் (UMEED – நம்பிக்கை) என்று பெயர் சூட்டியிருக்கின்றார்கள். இது உம்மீத் (நம்பிக்கை) கிடையாது. இது தஃப்ரீக் – பிளவுபடுத்துகின்ற சட்டம் ஆகும். இது வெறுப்பை (நஃப்ரத்) ஏற்படுத்துகின்ற சட்டம் ஆகும். இது அநீதி நிறைந்த சட்டம் ஆகும். இது கொடுமை மலிந்த சட்டம் ஆகும்.
இந்தச் சட்டத்தின் அசல் நோக்கங்கள் என்ன? இந்தச் சட்டத்தின் பெயரிலேயே அவை அனைத்தும் அடங்கியிருக்கின்றன. இவற்றை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
UMEEDஇல் U என்பது Unconstitutional – அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரான சட்டம்தான் இது என்பதை உணர்த்துகின்றது. ஆம். இந்தச் சட்டம் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 14, பிரிவு 15, பிரிவு 25, பிரிவு 26, பிரிவு 29 ஆகியவற்றுக்கும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஆன்மாவுக்கும் உயிர் நாடிக்கும் எதிரான சட்டமாகும்.
UMEEDஇல் M என்பது Manipulation என்பதைக் குறிக்கும். இந்தச் சட்டத்தின் மூலமாக இந்திய மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கின்றார்கள். சூழ்ச்சியுடன் அதிகாரங்கள் தவறாக பிரயோகப்படுத்தப்பட்டிருக்கின்றன. இப்போது மிகப் பெரும் அளவில் வக்ஃப் செய்யப்பட்ட நிலங்களைக் கைப்பற்றுவதற்கான சூழ்ச்சி மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
UMEEDஇல் E என்பது Exclusion என்பதைக் குறிக்கும். முஸ்லிம்களை தனிமைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அவர்கள் சட்டரீதியாக பாகுபடுத்தப்படுகின்றார்கள் (Legislative Discrimination). நம்முடைய நாட்டில் இந்துக்களுக்கு மதரீதியாக என்னென்ன உரிமைகள் இருக்கின்றனவோ, கிறித்தவர்களுக்கு மதரீதியாக என்னென்ன உரிமைகள் உள்ளனவோ, சீக்கியர்களுக்கும் பௌத்தர்களுக்கும் என்னென்ன மதரீதியான உரிமைகள் இருக்கின்றனவோ அப்படிப்பட்ட மதரீதியான உரிமைகள் அனைத்தும் முஸ்லிம்களுக்கு மட்டும் மறுக்கப்படுகின்றன. அந்த உரிமைகள் அவர்களிடமிருந்து பறிக்கப்படுகின்றன. ஆக E என்பது Exclusionஐ குறிக்கும்.
UMEEDஇல் இருக்கின்ற இன்னோர் E என்பது Encroachmentஐ குறிக்கும். இந்த நாட்டின் மாநிலங்களின் அதிகாரங்கள் Encroach செய்யப்படுகின்றன – ஆக்கிரமிக்கப்படுகின்றன. இந்த நாட்டின் சிறுபான்மையினரின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. மக்களாட்சியே ஆக்கிரமிக்கப்படுகின்றது. இப்போது மிகப் பெரும் அளவில் வக்ஃப் சொத்துகளை ஆக்கிரமிப்பதற்கான ஆயத்தங்கள் நடந்து வருகின்றன.
UMEEDஇல் இறுதியாக இருக்கின்ற D என்பது Divisionஐ குறிக்கும். இந்தச் சட்டத்தின் அசல் நோக்கம் மக்களை பிளவுபடுத்துவதாகும். இதுதான் தொடக்கத்திலிருந்தே இந்த அரசாங்கத்தின் நோக்கமாக இருந்து வந்துள்ளது. அதாவது மிகப் பெரும் அளவில் நாட்டில் பிளவை ஏற்படுத்துவதுதான் நோக்கமே. இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் பிளவையும் பிரிவையும் ஏற்படுத்துவதுதான் நோக்கமே.

இந்தச் சட்டத்தை இவர்கள் கொண்டு வந்த விதமும், கடந்த எட்டு மாதங்களாக இவர்கள் மும்முரமாக நடத்தி வந்த பரப்புரையும் நாட்டு மக்களை பிளவுபடுத்துகின்ற இவர்களின் நோக்கத்தை அப்பட்டமாக அம்பலப்படுத்துகின்றன.
ஆனால், நண்பர்களே! தோழர்களே! இளைஞர்களே!
குர்ஆன் தெள்ளத்தெளிவாக அறிவிக்கின்றது, “அவர்கள் சூழ்ச்சிகள் செய்தார்கள். அல்லாஹ்வும் திட்டமிட்டான். இத்தகைய திட்டங்களைத் தீட்டுவதில் அல்லாஹ் யாவரினும் வல்லவன் ஆவான்”. (அத்தியாயம் 3 : 54)
இவர்கள் இந்தச் சட்டத்தைக் கொண்டு நாட்டைப் பிளவுபடுத்த நினைத்தார்கள். ஆனால் அவர்களின் இந்த முயற்சியோ நாட்டு மக்களை அசாதாரணமான வகையில் ஒன்றுபடுத்திவிட்டது. அந்த ஒற்றுமையை நீங்கள் மக்களவையில் நேரலையாகப் பார்த்தீர்கள். நாடு முழுவதும் இடைவிடாமல் நடந்து வருகின்ற போராட்டங்களில் பார்க்கின்றீர்கள். நம்முடைய இந்து சகோதரர்களும் சீக்கிய சகோதரர்களும் எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த பெரும் பெரும் ஆளுமைகளும் களத்தில் இருப்பதைப் பார்க்கலாம். இதுதான் – இந்த ஒற்றுமைதான் நம்முடைய நாட்டின் வலிமை. இந்தச் சட்டம் நம்முடைய நாட்டின் இந்த வலிமையை விழித்தெழச் செய்திருக்கின்றது.
இப்போது நாம் செய்ய வேண்டியதென்ன?
இதே போன்ற Acronym ஒன்றைக் கொண்டே நாம் செய்ய வேண்டியவற்றை விவரிக்க விரும்புகின்றேன். நினைவில் வைத்துக் கொள்வதும் எளிது.
WAQF என்கிற Acronymஐ கொண்டே நாம் செய்ய வேண்டிய பணிகளை பட்டியலிட விரும்புகின்றேன்.
WAQFஇன் W என்பது Wake Upஐ குறிக்கும். அதாவது விழித்தெழுங்கள். வீடுகளை விட்டு வெளியே வாருங்கள். இந்தக் கருப்பு சட்டத்துக்கு எதிராகக் குரல் கொடுங்கள். உங்களின் அண்டை வீட்டாருக்கு இந்தச் சட்டத்தைக் குறித்துச் சொல்லுங்கள். குடும்பத்தாருக்குச் சொல்லுங்கள். நண்பர்களுக்குச் சொல்லுங்கள். இந்தச் சூழலிலும் அரசியல் அமைப்புச் சட்டத்துக்கே எதிரான இந்தச் சட்டத்தைக் கண்டித்து எதுவும் சொல்லாமல் எதையும் செய்யாமல் மௌனமாக இருப்பவர்களை வரலாறு மன்னிக்காது. ஆக விழிப்புணர்வு பெறுவோம். மக்களுக்கு எடுத்துச் சொல்வோம். மக்களையும் விழித்தெழச் செய்வோம் என்று நாம் சபதம் எடுப்போம்.
WAQFஇன் A என்பது Actionஐ குறிக்கும். அதாவது செயல்பட வேண்டும். என்னென்ன செய்ய வேண்டும்? அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் நம்முடைய நாட்டின் ஒட்டுமொத்த முஸ்லிம்களின் கூட்டமைப்பாக, எல்லாத் தரப்பினரையும் கொண்டதாக, எல்லா ஜமாஅத்களையும் உள்ளடக்கியதாக இருக்கின்றது. அவர்கள் சொல்கின்ற ஒவ்வொன்றையும் பேணுதலோடு செய்து முடியுங்கள். மின்னஞ்சல் செய்யச் சொல்கின்றார்களா? மின்னஞ்சல் செய்யுங்கள். கருப்புப் பட்டை அணியச் சொல்கின்றார்களா? கருப்பு பட்டை அணிந்து வாருங்கள். விளக்கை அணைக்கச் சொல்கின்றார்களா? விளக்கை அணையுங்கள். போராட்டத்தில் பங்கேற்கச் சொன்னால் பங்கேற்க வேண்டும். 20 கோடி முஸ்லிம்களும் அவர்களுடன் 120 கோடி மக்களும் களம் இறங்கினால் கொடுமையை ஒழிக்க முடியும்.
WAQFஇன் Q என்பது Questionஐ குறிக்கும். இது மிகவும் முக்கியமானதாகும். கேளுங்கள். மக்களவையில் உறுப்பினர்களும் கேள்விகளை எழுப்பினார்கள். உச்ச நீதிமன்றமும் கேள்விகளை எழுப்பியது. இவை எல்லாமே உறுத்துகின்ற கூர்மையான கேள்விகள். எட்டு மாதங்களாக பெரும் ஆரவாரத்துடன் இந்தச் சட்டத்தைக் கொண்டாடி வந்த அரசாங்கத்திடம் எந்தக் கேள்விக்கும் விடை இல்லை. நேற்று உச்ச நீதிமன்றத்திலும் பார்த்தோம். உச்ச நீதிமன்றம் இரண்டே இரண்டு எளிமையான கேள்விகளை எழுப்பியது. அரசாங்கமோ உச்ச நீதிமன்றத்திடம் முதலில் 24 மணி நேர அவகாசத்தைக் கேட்டார்கள். மறுபடியும் கால அவகாசம்தான் கேட்கப் போகின்றார்கள். எனவே நீங்கள் கேளுங்கள். முஸ்லிம்களின் வக்ஃப் நிர்வாகக் குழுவில் இந்து பிரதிநிதிகளை சேர்க்க விரும்புகின்றீர்களே, இந்துக் கோவில்களின் நிர்வாகக் குழுவில் முஸ்லிம்களைச் சேர்த்துக் கொள்ளத் தயாரா என்று கேளுங்கள். ஊடகத்தாரிடம் கேள்வி எழுப்புங்கள். சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்புங்கள். கேள்விக்ளைக் கொண்டு விவாதத்தின் திசையை மாற்றிவிட முடியும்.
WAQFஇன் F என்பது Fix the Narrativeஐ குறிக்கும். இப்போது நடப்பில் இருக்கின்ற Narrativeஐ மாற்றுங்கள். அறிவார்ந்த வாதங்களைக் கொண்டு அழுத்தமான கேள்விகளைக் கொண்டு இவர்களின் நரேட்டிவை நொறுக்குங்கள். விவாதப் பொருளை மாற்றி அமையுங்கள். மக்கள் கருத்தை மாற்றியமையுங்கள்.
இந்த நான்கைக் கொண்டு நாட்டின் விதியை மாற்றிவிட முடியும். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக சங்கிலித் தொடராய் நடந்து வருகின்ற கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். இந்தக் கொடுமைகளின் கல்லறை மீதான கடைசி ஆணியாய் இந்தக் கருப்புச் சட்டம் அமையும். இன்ஷா அல்லாஹ். அதுவே புதிய விடியலின் தொடக்கமாய் அமையும்.
திரும்பப் பெறு! திரும்பப் பெறு! வக்ஃப் சட்டத்தைத் திரும்பப் பெறு!
(தொகுப்பும் தமிழாக்கமும்: டி. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்)