சமூக நீதி அடிப்படையில இந்தியாவில் வாழ்கிற அனைத்து சமூக மக்களுக்கும் அனைத்து துறைகளிலும் வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதற்காக பலரது பெரும் போராட்டங்களுக்கும் முயற்சிகளுக்கும் பிறகு கிடைத்த வெற்றியான இட ஒதுக்கீடு குறித்து இங்கே சில முக்கியத் தகவல்களை பார்க்கலாம்.
இட ஒதுக்கீட்டின் வரலாறு
பல்வேறு சமூகங்களை உள்ளடக்கிய இந்த இந்தியாவில் கடந்த நூற்றாண்டு வரை தங்களை உயர் வகுப்பினராக அடையாளப்படுத்திக் கொண்ட ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே கல்வி, வேலை வாய்ப்பு, உயர் பதவிகள் என அனைத்து வசதிகளையும் வாய்ப்புகளையும் 100 சதவீதம் எடுத்துக்கொண்டனர். அதேவேளை மற்ற சமூக மக்களுக்கு குறிப்பாக பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூக மக்களுக்கு அனைத்துவிதமான வாய்ப்புகளும் மறுக்கப்பட்டு அவர்கள் அனைத்திலும் கீழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இந்த சூழலில் தான் ஒரு குறிப்பிட்ட சமூக மக்களுக்கு மட்டும் வாய்ப்பு கிடைப்பது தவறு அனைத்து சமூக மக்களுக்கும் எல்லா வாய்ப்புகளும் கிடைக்க வேண்டும்; அதற்கு இட ஒதுக்கீடு முறை கொண்டுவரப்பட வேண்டும் என்று தந்தை பெரியார் குரல் கொடுத்தார். காங்கிரஸ் கட்சியினுள் இருந்து கொண்டு அவர் எழுப்பிய குரல் கட்சியை சேர்ந்தவர்களால் கூட கண்டுகொள்ளப்படவில்லை; அவரது இட ஒதுக்கீடு எனும் கோரிக்கையை அவர்கள் ஏற்கவுமில்லை.
இதனால் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கம் எனும் இயக்கத்தை தொடங்கினார் பெரியார். அதனுடைய பிரதான நோக்கமாக இட ஒதுக்கீடு இருந்தது. இயக்கத்தின் மூலம் பல போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணமாக, சுதந்திரத்திற்கு பின் இட ஒதுக்கீடானது அரசால் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.
குறிப்பாக தமிழ்நாட்டில இட ஒதுக்கீட்டின் தாக்கம் என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் 50 சதவீதம் வரை தான் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என சட்டம் கொண்டுவரப்பட்ட போது தமிழ்நாட்டில் மட்டும் 69 சதவீதம் வரை இட ஒதுக்கீடு என சட்டம் கொண்டுவரப்பட்டு இன்றுவரை அது நடைமுறையிலும் இருக்கிறது. மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு இட ஒதுக்கீட்டை உறுதியாக பின்பற்றியும் வருகிறது.
இந்து மதத்தில் இருக்கக்கூடிய பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட எல்லா சாதி மக்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு இருப்பது போன்றே சிறுபான்மை மக்களான இஸ்லாமிய மக்களுக்கும் தமிழ்நாட்டில 3.5 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறையில இருக்கிறது.
சாதியின் அடிப்படையில் இட ஒதுக்கிட வழங்குவது சரியா?
இட ஒதுக்கீடு சாதியின் அடிப்படையில் வழங்குவது சரியா? எனும் கேள்வி நம்மில் பலருக்கும் எழலாம். நிச்சயமாக சரி என்பதே இதற்கான பதில். ஏனெனில், இந்தியாவைப் பொறுத்தவரை ஏற்றத்தாழ்வு என்பது பிறப்பால் வரையறை செய்யப்படுகிறது. பொருளாதாரமோ, நிறமோ அல்லது மற்ற எந்த காரணிகளோ இங்கு முன்னுரிமைபடுத்தப்படுவது இல்லை.
வர்ணாசிரம அடிப்படையில் உயர் இடத்தில பிறந்தவர்கள் உயர் சாதியாகவும் அதற்கு அடுத்தடுத்த நிலையில் பிறந்தவர்கள் கீழ் சாதியினராகவும், பிற்படுத்தப்பட்டவர்களாகவும், ஒடுக்கப்பட்டவர்களாகவும் வகைப்படுத்தப்பட்டனர். சாதிக்கு ஏற்றார்போல் இவர்கள்தான் படிக்க வேண்டும் இவர்கள் தான் அரசு வேலைகளுக்கு செல்ல வேண்டும் என்றும் பிரிக்கப்பட்டனர். இந்த ஏற்றத்தாழ்வுகளை உடைத்து மனிதர்கள் அனைவரும் சமம், அனைவருக்கும் அனைத்து வாய்ப்புகளும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. எனவே, சாதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவது சரியே.
ஏன் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவது இல்லை? எனும் கேள்வி உங்களுக்கு எழலாம்; இக்கேள்வி நியாயமானதாகவும் தோன்றலாம். ஆனால், இந்தியாவில் ஏற்றத்தாழ்வு என்பது பிறப்பின் அடிப்படையில் அல்லவா உள்ளது. அதாவது, முன்பு கூறியது போல் சாதியின் அடிப்படையில்தான் மக்கள் ஒடுக்கப்படுகின்றார்கள். பொருளாதாரத்தின் அடிப்படையில் அல்ல. எனவே, எதன் அடிப்படையில் மக்கள் ஒடுக்கப்பட்டு, சிறுமைப்படுத்தப்பட்டு, இழிவுக்குள்ளாக்கப்பட்டு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றார்களோ அதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவதே சரி. இதனால் தான், இட ஒதுக்கீடானது சமூகம், சாதி, மதம் ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.
இட ஒதுக்கீடானது மறுக்கப்பட்ட வாய்ப்புகளின் கதவுகளை திறந்து ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை சமூகம், கல்வி, பொருளாதாரம் ஆகியவற்றில் முன்னேறிச்செல்ல வழிவகைச் செய்கிறது. இதையே, சட்டமேதை அம்பேத்கர் அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கும் போது இட ஒதுக்கீடு என்பது சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கானது என குறிப்பிட்டு இருக்கிறார்.
இட ஒதுக்கீட்டிற்கு எதிராக வைக்கப்படும் வாதங்களும் நமது பதிலும்
இட ஒதுக்கீடு இருப்பதால் தான் சாதி இன்னும் இருக்கிறது எனும் வாதம் சிலரால் முன்வைக்கப்படுது. இது முழுக்க முழுக்க தவறான வாதம். இட ஒதுக்கீடு என்பது ஏற்கனவே குறிப்பிட்டது போல சமூக அடிப்படையில் ஆயிரம் ஆயிரம் ஆண்டு காலமாக ஒடுக்கப்பட்டு, பிற்படுத்தப்பட்டு இருந்தவர்களின் வாழ்க்கையை முன்னேற்றுவதற்காக கொண்டுவரப்பட்டது. இட ஒதுக்கீடு இருப்பதால் தான் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் முன்னேற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறார்கள். இதுவும் இல்லையெனில் நூறாண்டுகளுக்கு முன்பு இருந்தது போல குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த அந்த உயர் வகுப்பினர் மட்டும்தான் எல்லா வாய்ப்புகளையும் அனுபவிப்பர்; மற்றவர்களுக்கு மீண்டும் ஒடுக்குமுறையே பரிசாக கிடைக்கும்.
சாதிச் சான்றிதழ்களை ஒழிப்பதால் சாதியை ஒழிக்க முடியும் எனும் வாதமும் சிலரால் முன்வைக்கப்படுகிறது. இதுவும் மிகத்தவறான ஒரு வாதமே.
இதற்கு ஒரு உதாரணத்தை பார்ப்போம். நமக்கு உடல்நிலை சரியில்லை என்று மருத்துவரிடம் செல்வோம்; மருத்துவர் நம்மை பரிசோதித்து உடலுக்குள் ஏதாவது பிரச்சனை இருந்தால் அதை ஸ்கேன் மூலமாகவோ எக்ஸ்ரே மூலமாகவோ கண்டறிவார். அந்த ஸ்கேன், எக்ஸ்ரே ரிப்போர்ட்டை வைத்துதான் நமக்கான சிகிச்சையை மருத்துவர் அளிப்பார். இங்கு சாதிச் சான்றிதழ் என்பது மருத்துவ ரிப்போர்ட் போன்றது. மருத்துவ ரிப்போர்ட்டை வைத்து எப்படி மருத்துவர் நமக்கு சிகிச்சை அளிப்பாரோ அது போல சாதிச் சான்றிதழை வைத்து வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்படுகின்றன.
சாதிச் சான்றிதழ் இல்லையெனில் இட ஒதுக்கீட்டை பெற இயலாது; இட ஒதுக்கீடு இல்லையெனில் வாய்ப்புகள் மறுக்கப்படும்; வாய்ப்புகள் இல்லையெனில் மீண்டும் ஒடுக்குதல்களுக்கும் பிற்படுத்துதளுக்கும் உள்ளாக்கப்படுவோம்.
தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டால் விளைந்த பயன்கள்
தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னேறிய மாநிலமா இருப்பதற்கு இட ஒதுக்கீடே மிக முக்கியக் காரணமாகும். தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டின் மூலம் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டு இருக்கின்றன. மக்களின் தரத்தை உயர்த்துவதும், சமூக நீதியை பரவலாக்குவதும், அனைவருக்கும் சமவாய்ப்பை ஏற்படுத்தித் தருவதையும் இட ஒதுக்கீட்டின் மூலம் தமிழ்நாட்டை ஆட்சி செய்யும் அரசுகள் தொடர்ந்து செய்து வருகின்றன.
விஏஓ முதல் ஐஏஎஸ் வரை அதிகாரம் பரவலாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசனுடைய திட்டங்கள் எளிதாக அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்று சேர்க்கப்படுகின்றன. மருத்துவர்கள், பொறியாளர்கள் என பல்துறையாளர்கள் அதிக அளவில் உருவாகினர். கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட மனித வள குறியீடுகளில் தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக இருந்து வருகிறது. இவை தமிழ்நாடு எனும் கட்டமைப்பை மிக வேகமாக வளர்ச்சியின் பாதையில் கொண்டு செல்கின்றன.
இட ஒதுக்கீடே தமிழ்நாட்டின் இம்மாபெரும் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாகா விளங்குகிறது. இப்படி இட ஒதுக்கீட்டின் சிறப்புகளை சரியான முறையில் விளங்கிக் கொண்டும் இட ஒதுக்கீடு குறித்து பரப்பப்படும் தவறான கருத்துகளை களைந்தும் வளர்ச்சிப் பாதையில் நாம் தொடர்ந்து முன்னேறிச் செல்ல வேண்டும். இதுவே இட ஒதுக்கீட்டின் இலக்காகவும் உள்ளது.