தமிழ்நாட்டில் தனியார் பல்கலைக்கழகங்களைத் தொடங்குவதற்கான விதிமுறைகளைத் தளர்த்தும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ள தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்டம் – 2026 மிகுந்த கவலையளிக்கிறது. கல்வியை மேலும் தனியார்மயமாக்கி வணிகமயமாக்க வழிவகுக்கும் இந்நடவடிக்கையை இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) தமிழ்நாடு வன்மையாகக் கண்டிக்கிறது.
கல்வி என்பது இலாபம் ஈட்டுவதற்கான தொழில் அல்ல மாறாக அது அனைவருக்கும் சமமாகக் கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமையாகும். உயர்கல்வியில் தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்தை அதிகரிப்பது என்பது கல்விக் கட்டண உயர்வு மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கான வாய்ப்புகளில் சமத்துவமின்மையை அதிகரிக்கும் அபாயம் கொண்டது.ஒருபுறம் ஒன்றிய பாசிச பாஜக அரசின் தேசிய கல்விக் கொள்கையை (NEP 2020) எதிர்ப்பதாகக் கூறும் தமிழ்நாடு அரசு மறுபுறம் கல்வியின் தனியார்மயமாக்கல் மற்றும் வணிகமயமாக்கலுக்கு வழிவகுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது முரண்பாடானது.
தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பது அதன் பெயரை மட்டும் நிராகரிப்பதாக இல்லாமல் தனியார்மயக் கொள்கையையும் நிராகரிப்பதாக இருக்க வேண்டும்.தனியார் பல்கலைக்கழகங்களை அதிகரிப்பது உயர்கல்வி வளர்ச்சிக்கான தீர்வல்ல. மாறாக, அரசுப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கி அவற்றை வலுப்படுத்த வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்புவதோடு நூலகங்கள், ஆய்வகங்கள், விடுதிகள், ஆராய்ச்சி மற்றும் கல்விக் கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும்.
எனவே, தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்டம் – 2026-ஐ அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். கல்வியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர் அமைப்புகளுடன் விரிவான கலந்தாலோசனை நடத்தி, அனைவருக்கும் சமமான, தரமான மற்றும் குறைந்த செலவிலான உயர்கல்வியை அரசு உறுதி செய்ய வேண்டும் என SIO தமிழ்நாடு வலியுறுத்துகிறது.
