Close Menu
  • முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
Facebook Instagram YouTube WhatsApp
சகோதரன்சகோதரன்
Facebook Instagram YouTube WhatsApp
  • முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
சகோதரன்சகோதரன்
Home»கவிதை»கல்வி அகதிகள்.!
கவிதை

கல்வி அகதிகள்.!

AdminBy AdminMay 5, 2018Updated:June 1, 202315 Comments2 Mins Read
Share
Facebook Twitter Telegram WhatsApp Email

தொலை தூர நகரங்களுக்கு
தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கு
அவசர உதவி எண்கள்
அறிவிக்கப்படுள்ளன
அவர்கள் ஒன்றும் ஆழிப்பேரலையால்
சூழ்ந்துகொள்ளப்பட்டிருக்கவில்லை

அவர்களுக்கு
பயண உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது
அவர்கள் கடும் புயலில்
காணாமல் போய்விடவில்லை

அவர்களுக்கு உதவத் தயார் என்று
கருணைக் கரங்கள் நீட்டப்படுகின்றன
அவர்கள் பூகம்பங்களில் இடுபாடுகளில்
சிக்கிக்கொண்டிருக்கவில்லை

அவர்களுக்கு
காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்படவிருக்கிறது
அவர்கள்
ஒரு கலவரத்தில் சிதறடிக்கபட்டவர்கள் அல்ல

அவர்களுக்கு
தங்குமிடம் தர யாரோ
அன்புக் கரம் நீட்டுகிறார்கள்
அவர்கள் நகரங்கள்
தண்ணீரில் மூழ்கிப்போய்விடவில்லை

அவர்களுக்கு உணவளிக்கத்தயார் என்று
யாரோ வாக்குறுதி அளிக்கிறார்கள்
அவர்கள் அகதி முகாம்களைத்தேடி
நடந்துகொண்டிருக்கவில்லை

அவர்கள் வெறுமனே
ஒரு தேர்வை எழுத விரும்புகிறார்கள்
அதற்காக நாம் ஏன்
அகதிகளாக மாற்றப்படுகிறோம் என்பதை
அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை

இதற்கு முன்னும் அவர்கள்
ஒரு தேர்வை எழுத நிர்பந்திக்கப்பட்டார்கள்
மூச்சுத்திணறினார்கள்
ஒரு இளம்பெண்
தன் கழுத்தில்
ஒரு தூக்குக் கயிறை மாட்டிக்கொண்டு
அந்த மூச்சுத்திணறலிருந்து விடுபட்டாள்

இதற்கு முன்னும் அவர்கள்
ஒரு தேர்வை எழுத வந்தார்கள்
அவர்கள் உள்ளாடைகள் அவிழக்கப்பட்டன
கீழே கொட்டபட்ட கைப்பைகளிலிருந்து
சானிடரி நாப்கின்கள் சிதறி விழுந்தன
உள்ளாடைகளை கண்ணீருடன் அணிந்து கொண்டு
நாப்கின்களை பொறுக்கிகொண்டு
அவர்கள் தேர்வை எழுதினார்கள்

இதற்கு முன்னும் அவர்கள்
ஒரு தேர்வை எழுதினார்கள்
கடினமான கேள்வித்தாள்களின் பாறைகளில்
அவர்கள் தங்கள் தலையை முட்டிக்கொண்டார்கள்
தோல்வியடைந்து மெளனமாக வீடு திரும்பினார்கள்

இப்போது அவர்கள்
ஒரு தேர்வை எழுத நெடுந்தூரம் செல்ல
நிர்பந்திக்கபட்டிருக்கிறார்கள்
ரயில் பெட்டிககளின் ஜன்னலோரங்களில் அமர்ந்து
இரவெல்லாம் இருளையே
தூங்காமல் வெறித்துப் பார்த்துகொண்டிருக்கிறார்கள்

அவர்களுக்கு அவசர உதவி எண்கள் தரப்பட்டிருக்கின்றன
அவர்களுக்கு கருணைக் கரம் நீட்டுபவர்கள் இருக்கிறார்கள்
அவர்கள் வெறுமனே
ஒரு தேர்வை எழுதத்தான் விரும்பினார்கள்

அவர்கள் போர்முனைக்குச் செல்வதுபோல
பெற்றோர்கள் பதட்டத்துடன்
அவர்களை வழியனுப்புகிறார்கள்
’நீ போகத்தான் வேண்டுமா?’ என்று
ஒரு அன்னை தன் மகளின் கைகளை பற்றிக்கொண்டு கேட்கிறாள்
அவர்கள் வெறுமனே ஒரு தேர்வைத்தான் எழுத விரும்பினார்கள்

நாம் ஏன் எப்போதும்
எதற்காகவாவது மன்றாடியபடி
தெருக்களில் நின்றுகொண்டிருக்கிறோம்?
நாம் ஏன் நம் எளிய உரிமைகளுக்காக
இத்தனை உரத்த குரலில் பேச நிர்பந்திக்கபடுகிறோம்?
ஒரு இனம் பிற இனங்களைபோல வாழ
ஏன் இத்தனை தியாகங்களை நோக்கி செலுத்தப்படுகிறது?

நாம் வேட்டையாடப்படுகிறோம்
சிறு முயல்களைபோல
சிறு எலிகளைப்போல
சிறு எறும்புகள் போல

நாம் எதையாவது கேட்டு
கத்துவதைக் கண்டு

சிலரது மதுகோப்பைகளில்
நமது கோபம்
ஒரு ஐஸ் துண்டைப்போல விழுகிறது

முதலில் நம்மை அவர்கள்
சவுக்கால் அடிப்பார்கள்
நாம் அதைப்பற்றி கேள்வி கேட்பதற்குள்
அந்தக் காயத்தில் உப்பைத் தடவுவார்கள்
அப்போது நாம் சவுக்கடியைப்பற்றியல்ல
உப்பின் எரிச்சலைப் பற்றி பேசத் தொடங்கிவிடுவோம்
அவர்கள் உடனே நம்மேல் ஒரு வாளி
கொதிக்கும் தண்னீரை ஊற்றுவார்கள்
அப்போது நாம் உப்பைப்ப பற்றியல்ல
வெந்நீரின் கொடுமை பற்றி பேசத் தொடங்கிவிடுவோம்
அப்போது அவர்கள் நம் நகங்களை
பிடுங்க ஆரம்பிப்பார்கள்
நாம் ’நகங்களை பிடுங்காதே
நகம் வைத்திருப்பது எங்கள் உரிமை’ என்று
முழங்கத் தொடங்குவோம்

இப்படித்தான்
நாம் வழிநடத்தப்படுகிறோம்
இப்படித்தான்
நாம் வேட்டையாடப்படுகிறோம்
எப்போதும் நெருக்கடிகளின் நுகத்தடிகள்
நம் கழுத்தை அழுத்திக்கொண்டேயிருக்கின்றன
நாம் களைத்துப்போய்விட்டோம்

இந்தக் காலம் இதயமற்றது
இந்தக் காலம் வஞ்சகமானது
இந்தக் காலத்தில் எதிரி
இருளில் மறைந்திருந்து சூதாடுகிறான்

நாம் என்ன செய்யபோகிறோம் என
நம் குழந்தைகள் அச்சத்துடன்
நம் முகத்தையே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்

4. 5. 2018
மாலை 6.41
மனுஷ்ய புத்திரன்

Loading

NEET
Share. Facebook Twitter Telegram WhatsApp Email
Admin
  • Website

Related Posts

மாணவர்களின் குரலாக ஒலிக்கும் எஸ்ஐஓவின் மாணவர் தேர்தல் அறிக்கை

January 26, 2026

Boycott: இஸ்ரேலின் இன அழிப்புக்கு எதிரான ஒரு நடவடிக்கை

September 27, 2025

ஷதியா அபூ கஸ்ஸாலே: ஃபலஸ்தீன விடுதலைப் போராட்டத்தின் முதல் பெண் உயிர்த்தியாகி

September 10, 2025

காஸாவின் குழந்தை

October 7, 2024

ஏ.ஜி. நூரானி நினைவலைகள்

September 3, 2024

ஒழுக்க விதிகளை அறிவியலால் தர இயலுமா? ஓரினச்சேர்க்கையை முன்வைத்து ஓர் ஆய்வு

August 29, 2024
Leave A Reply Cancel Reply

Social Circle
  • Facebook
  • Instagram
  • YouTube
  • WhatsApp
Latest Posts

சிறையிலிருந்து சீரமைப்பு!

March 25, 2026

PM CARES: ஒன்றிய அரசின் மற்றுமொரு ஊழல் பெரும் கொள்ளை

March 17, 2026

உலகை உலுக்கும் எப்ஸ்டீன் ஆவணங்கள்

February 12, 2026

மாணவர்களின் குரலாக ஒலிக்கும் எஸ்ஐஓவின் மாணவர் தேர்தல் அறிக்கை

January 26, 2026
Facebook Instagram YouTube WhatsApp
© 2026 சகோதரன். Customized by Dynamisigns.

Type above and press Enter to search. Press Esc to cancel.