கேள்வித்தாள் வெளியானதாக எழுந்த புகாரையடுத்து, 10ம்வகுப்பில் கணிதத் தேர்வையும், 12-ம் வகுப்பில் பொருளாதாரப் பாடத் தேர்வையும் மீண்டும் நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. ஏற்கனவே மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் கேள்வித்தாள்கள் வெளியானதாக சில தினங்களுக்கு முன்புதான் மாபெரும் அதிர்ச்சியும் போராட்டங்களும் நடைபெற்றன. அந்த சுவடுகளே இன்னும் அழியாத நிலையில் இப்போது CBSE வினாத்தாள்கள் வெளியானது கல்வி ஆர்வலர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எவ்வளவு சிரமப்பட்டு மாணவர்கள் தேர்வுகளுக்கு தயாராகிறார்கள்.? அதிலும் CBSE மாணவர்கள் ஒன்றரை வருடங்களாக பொதுத் தேர்வுக்கு தயாராக்கப்படும் நிலையில் தேர்வாணையத்தின் கையாலாகாத்தனத்தால் கேள்வித்தாள்கள் வெளியானதற்கு மாணவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டுமா.? எழுதிய தேர்வுகளை மீண்டும் எழுதச் சொல்வது மாணவர்கள் மீதான அதிகார வன்கொடுமை என்றுதான் சொல்ல முடியும்.
வினாத்தாள்களையே பாதுகாக்க திராணியில்லை. இந்த இலட்சணத்தில் நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டமாம், அந்த பாடத்திட்டத்தின் அடிப்படையில் ஒரே பொதுத் தேர்வாம். வினாத்தாள் வெளியானதற்கு காரணமானவர்களை கண்டறிந்து கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும். மேலும் மறுதேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்